” நான் தான் நன்றாகவே செய்தேன் எனக் கூறிய ஜனாதிபதிக்கு மக்கள் நேற்று நன்றாகவே பதில் வழங்கியுள்ளனர். இதனை புரிந்துகொண்டு எதிர்கால நடவடிக்கைகளை ஜனாதிபதி திட்டமிட வேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
” இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறையாகும். அதற்கு காரணம் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டுகின்றது.
ஜனாதிபதிக்கு எதிராக அவரின் பதவியிலிருந்து வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களில் அனேகமானவர்கள் இளைஞர்களே.
இதே இளைஞர்கள் தான் அன்று கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வர வேண்டும் என்று முன்னின்று வாக்களித்தார்கள். ஆனால் இன்று அதே இளைஞர்கள் ஜனாதிபதியை பதவி விலகி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோஷம் இடுகின்றார்கள் அந்தளவிற்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டமானது எந்தவிதமான அரசியல் கட்சிகளின் தலையிலோ அல்லது பொது அமைப்புகளின் தலையிலோ இல்லாமல் மக்களாகவே முன்வந்து இந்த ஆரப்பாட்டத்தை முன்னெடுத்திருக்கின்றார்கள். இது போன்ற இன்னும் பல போராட்டங்கள் இடம்பெறும்.
எனவே இதை புரிந்துகொண்டு ஜனாதிபதி உரிய தீர்வினை எடுக்க வேண்டும் என்றார்.
#SriLankaNews
Leave a comment