சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புக்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கையின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்காக வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்னவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும் இடையில் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஜெயவர்த்தனபுர, கோட்டையில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக விளக்கமளித்த கமால் குணரத்ன, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட சுமார் ஒரு தொன் அளவிலான போதைப்பொருள்கள் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment