தியாகராஜா நிரோஷ்
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தவிசாளர் நிரோஷை மீளவும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு!

Share

யாழ்., நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷுகு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட முடியும் எனக் கடந்த வருட ஆரம்பத்தில் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் வழக்கு மீளவும் நாளை புதன்கிழமை மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் தடைகளை ஏற்படுத்தினர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமத்துக்குத் தடை ஏற்படுத்தியதாக மேலும் சிலரை இணைக்கவுள்ளதாகவும் மன்றில் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம், “தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக் கோவையின் பிரகாரம் இந்த வழக்கை சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தைப் பொலிஸார் தாக்கல் செய்திருக்கவேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் என்ற வகையில் தவிசாளர் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருத முடியாது.

நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையைக் குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது. எனவே இவ்வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” – என்று மன்றில் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதேவேளை, தனியாராக இருந்தாலேன்ன அரசதாபனமாக இருந்தாலேன்ன பிரதேச சபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

அந்த வழக்கைக் கடந்த வருடம் விசாரித்த நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, “பொலிஸார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கைத் தொடருங்கள்” – என்று பொலிஸாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கில் மேலதிக விசாரணைகள் தேவைப்படின் தவிசாளர் ஒத்துழைக்க வேண்டும் எனவும், தவிசாளரை ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீளவும் இந்த வழக்குக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை முதலாவது சந்தேகநபராக அடையாளப்படுத்தி நாளை மன்றில் முன்னிலையாகுமாறு கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இராணுவத்தினரும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து நிலாவரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் அத்திவாரம் போன்று கிடங்குகளை வெட்டிய நிலையில் அங்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்புக்களை அடுத்து பொலிஸ் நிலையத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் இணக்கத்தை ஏற்படுத்துதல் என அழைக்கப்பட்டு பொலிஸ் அதிகாரிகளால் தவிசாளர் நிலாவரையில் தலையிடக்கூடாது என வலியுறுத்தப்பட்ட நிலையில் தவிசாளர் அதனை ஏற்க மறுத்திருந்தார். இந்நிலையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...