மக்கள் ஏன் அரசின் மீது கோபமாக உள்ளனர் என்பது தமக்குப் புரிகின்றது எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச எம்.பி., ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மௌனம் கலைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இருப்பினும், இப்போது கோபத்துக்கான நேரம் மட்டுமல்ல, தீர்வுக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதியும் அரசும் நாட்டுக்கான திட்டங்கள் குறித்து இன்னும் வெளிப்படையாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
அத்தோடு, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான அவரது திட்டங்கள் குறித்து விளக்கமளித்திருக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசு தேவையான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்பதையும், ஜனாதிபதியின் மௌனம் தற்போதைய நிலைமைக்கு உதவவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.
எனவே, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது திட்டங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.
மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவது அவர்களின் உரிமை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றது. அது நெருக்கடியை மேலும் உருவாக்கக்கூடும்” – என்றார்.
#SriLankaNews