tamilnaadi 34 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் யுக்திய செயற்திட்டம்: ஐ.நா அதிருப்தி

Share

இலங்கையின் போதைப்பொருள் பிரச்சினைக்கு அரசாங்கமானது பாரிய பாதுகாப்பு அடிப்படையிலான பதிலைக் கடைப்பிடிப்பது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோஸ்ஸெல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய “யுக்திய” நடவடிக்கையை மீளாய்வு செய்யவும், மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், வலியுறுத்துவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் தவறாக நடத்துதல் மற்றும் உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணை உரிமைகளை மறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முழுமையாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில், போதைப்பொருளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க உதவும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளுக்குப் பதிலாக, இலங்கையில் உள்ள அதிகாரிகள் நாட்டின் போதைப்பொருள் பிரச்சினைக்கு அதிக பாதுகாப்பு அடிப்படையிலான பதிலைக் கடைப்பிடிப்பது காத்திரமான விடயமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023, டிசம்பர் 17ஆம் திகதி முதல் போதைப்பொருள் தொடர்பான விடயங்களுக்காக 29,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, சிலர் மோசமான சிகிச்சை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

பாதுகாப்புப் படையினர், தேடுதல் உத்தரவுகள் இன்றி சோதனைகளை நடத்தியதாகவும், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பயனர்களை கைது செய்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும், அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல், மோசமான முறையில் நடத்துதல், சித்திரவதை செய்தல் மற்றும் பொது இடங்களில் ஆடைகளை அகற்றுதல் போன்ற பல மீறல்களுக்கு மக்கள் உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளின் மிரட்டலை எதிர்கொண்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்காகச் செயற்படும் சட்டத்தரணிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் பயன்பாடு சமூகத்திற்கு ஒரு கடுமையான சவாலாக இருந்தாலும், கடுமையான சட்ட நடைமுறை அணுகுமுறை தீர்வு அல்ல என்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோஸ்ஸெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...