பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (PTA) நீக்கக் கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் திரட்டப்பட்ட கையெழுத்துகள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த நடவடிக்கை நேற்று (28.02.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் வடக்கு கிழக்கு முழுவதும் சிவில் சமூக அமைப்புகளால் நடத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டம் நேற்று முன்தினம் (27.02.2026) நிறைவுக்கு வந்தது.
இதையடுத்து, நேற்றைய தினம் திரட்டப்பட்ட அனைத்துக் கையெழுத்துகளும் நீதியமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிரதிசெய்யப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுக்கும், இந்தியா, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் சீனா உள்ளிட்ட தூதரகங்களிடம் நேரில் கையளிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மிகக் குறுகிய காலப்பகுதியில் குறிப்பிட்ட சில சிவில் அமைப்புகள் இணைந்து அரசு கொண்டுவர எத்தனிக்கும் மோசமான பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பெருமளவிலான கையெழுத்துகள் திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.