இலங்கை – காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து!
இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பது தொடர்பில்
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில், அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் மற்றும் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் நாட்டின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் சுற்றுலா, மருத்துவம் மற்றும் வணிகம் போன்ற துறைகள் அபிவிருத்தியடையும். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் அதிகரிக்கும்.
மேலும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பிலும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீனவா்களிடம் ஒப்படைக்கக் கோரியும், கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி மேம்பாடு, கூட்டு முயற்சிகள், மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a comment