அரசாங்கத்திற்கு எதிராகவும் கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு போகவேண்டும் என்ற கோஷத்தோடு தமிழ் முற்போக்கு கூட்டணி தலவாக்கலை நகரில் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணி தலவாக்கலை நகரில் நடைபெற்றது.
எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும் நுவரலியா வழியாகவும் அட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.
அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்தனர்.
தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. அவர் அங்கு மக்களுக்கு உரையாற்றினார்.
#SriLankaNews
Leave a comment