புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம் நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்களையும் கறுப்புப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிபந்தனைகளின் 1373 இன் கீழ், இலங்கைக்குள் 18 அமைப்புக்களுக்கும், 577 தனி நபர்களுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தடை விதித்தது.இந்நிலையில், இலங்கைக்குள் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய 6 அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனி நபர்களுக்குமான தடையும் நீக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
“இது நல்லதொரு விடயம். அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் மீள் எழுச்சிக்குப் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியம்.இதனை உணர்ந்து சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளினதும், தனிநபர்களினதும் தடையை சிறிலங்கா அரசாங்கம் நீக்கியுள்ளது.
நாட்டின் நலன் கருதி அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை வரவேற்கின்றோம். அதேவேளை, தொடர்ந்தும் தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலும் ரணில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசு நெருக்கமாகப் பேசி நாட்டுக்காக அவர்களின் உதவிகளைப் பெற வேண்டும்” – என்று தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment