ரம்புக்கனையில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையின்போது காயமடைந்த 3 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.
சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தொடர்கின்றது.
#SriLankaNews
Leave a comment