மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
” மேற்படி சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. பல குழுக்கள் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சிஐடியினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
24 பொலிஸார் காயம் அடைந்துள்ளனர். தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் பொலிஸ் வைத்தியசாலைகளில் இவர்கள் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
போராடும் உரிமையை பொலிஸார் மதிக்கின்றனர். இது தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சம்பவங்களின்போது பொலிஸாருக்கு அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.” – என்றும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment