அண்மையில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக இலங்கைக்குச் சீனா வழங்கிய நிதியுதவி மற்றும் தாராளமான ஆதரவிற்காகச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது ஆழமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பல ஆண்டுக் கால நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், சீனா 1 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 10 மில்லியன் RMB மதிப்புள்ள அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வலிமை மற்றும் உதவியை வழங்கி, கடினமான தருணங்களில் சீனா தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘Rebuilding Sri Lanka’ (இலங்கையை மீளக் கட்டியெழுப்புதல்) என்ற நிதியம் நிறுவப்பட்டு, நாடு தற்போது மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு கட்டத்திற்கு மாறியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான உதவி மற்றும் ஆதரவு நடவடிக்கைகளில் சீனாவின் தொடர்ச்சியான பங்களிப்பை இலங்கை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.