“நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதெனகூறி இரு குடும்பங்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளன. இடம்பெயர்வு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்நிலைமையை தடுப்பதறகு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து சில குடும்பங்கள், தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ள விடயங்களை மையப்படுத்தியே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டில் உணவு பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.
#SriLankaNews