கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் (Rapper) கணேஸ்குமார் சங்கீத்ஷன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டமை, இந்நாட்டின் கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாரிய அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இக்குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இலங்கையில் காலத்துக்குக் காலம் கலைஞர்கள், படைப்பாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தியதற்காகப் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) விசாரணைக்கு அழைக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்கதையாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார். இத்தகைய அடக்குமுறைகளின் காரணமாகப் பல கலைஞர்களின் படைப்புகள் பொதுவெளியில் வர முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வரிசையிலேயே தற்போது பாடகர் சங்கீத்ஷனின் கைதும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
இந்த நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது ஒரு பாதுகாப்புச் சட்டமாக அன்றி, மக்களின் நியாயமான உணர்வுகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் ஒடுக்கும் ஒரு பிரதான அடக்குமுறைக் கருவியாகவே அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார். இதன் காரணமாகவே, இலங்கை போன்றதொரு ஜனநாயக நாட்டிற்கு இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இனிமேலும் தேவையில்லை என்பதைத் தாங்கள் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக அவர் விவரித்தார்.
எனவே, தற்போதைய புதிய அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் உயரிய சபையில் கோரிக்கை விடுத்தார். அத்துடன், சர்வதேச அளவில் விமர்சிக்கப்படும் இந்த அடக்குமுறைச் சட்டம் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.