இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரனின் சிறு வயது மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கண்டிப்பாக யுத்தக்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீர கொல்லப்பட்டபோது அவரது மகனோ அல்லது ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமான சஹ்ரான் உயிரிழந்தபோது அவரது மகளோ கொல்லப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பிரபாகரனின் சிறு வயது மகனுக்கு மட்டும் ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
பிரிட்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் சனல் 4 ஆவணப்படத்தின் ஆதாரங்களை நிராகரித்துள்ளதாக வெளியான செய்திகளைக் குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், பாலச்சந்திரன் பதுங்கு குழியில் உணவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படமும், அதன் பின்னர் அவரது உடலில் துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளங்களுடன் அவர் கிடக்கும் புகைப்படமும் ஆவணப்பட ஆதாரங்களாக வெளிவந்துள்ளதாகக் கூறினார். ஒரு பயங்கரவாதியின் மகனாக இருந்தாலும் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாதவை என்றும், போர்க்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நடந்திருப்பது உண்மையானால் அது நிச்சயமாக ஒரு யுத்தக்குற்றமாகவே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.