8 36
இலங்கைசெய்திகள்

மன்னார் பொது வைத்தியசாலை விவகாரம்.. சத்தியலிங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

Share

மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மீளகையளிப்பதாக அமையும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்வாறான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (29.05) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும், “தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமையாகும்.

தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக மாகாண சபை முறைமை அமையாதுவிடினும் ஓரளவுக்கேனும் தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் மாகாணசபை சட்டத்தில் உள்ளது.

மாகாண சபையிடம் மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கான போதுமான நிதி வளம் இல்லையென்பதால் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதாக காரணம் முன்வைக்கப்படுகின்றது.

மாகாணசபை சுயமாக இயங்கக் கூடிய வகையில் அதனை பலப்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும். இதுவரை மாகாணத்திற்கான நிதியை திரட்டக் கூடிய வகையிலான எந்தவிதமான விசேட திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் செய்யவில்லை.

மாறாக வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு மாகாணத்திற்கான அந்நிய செலாவணியை ஈட்டக் கூடிய வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவதற்கு மத்திய அரசு மறைமுகமாக பல தடைகளை விதித்தது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆனாலும் அதனை சீர்செய்வதற்காக வைத்தியசாலை நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வருதென்பது தீர்வாக அமையாது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பாக சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகள் மாகாண சபையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றன.

ஏற்கனவே தேசிய பாடசாலைகள் என்ற போர்வையில் மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வந்த முன்னணிப் பாடசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் ஆபத்தினை அறியாதவர்களாய் எம்மவர்களும் துணை போயுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டாலும் சுகாதார துறைக்கான அபிவிருத்திக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதியே பயன்படுத்தப்படுகின்றது.

சுகாதாரத் துறையை பொறுத்துவரை பன்னாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி என்பன தொடர்ச்சியாக நிதி வழங்கி வருகின்றன.

மத்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் நிதியை மாகாண அமைச்சினூடாக வழங்குவதன் மூலம் மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.

கடந்த காலங்களில் மாகாண சுகாதார அமைச்சராக நான் இருந்த போது மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் பாரிய நிதி பங்களிப்புடனான சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தி இருந்தோம்.

ஆகவே மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கு அதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது ஒரு போதும் தீர்வாக அமையாது.

மாறாக இருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தவதற்கு நாமே வாய்ப்பினை வழங்கியதாக அமைந்துவிடும். கடந்த அரசாங்கங்கள் செய்த தவறை இந்த அரசாங்கமும் தொடர்கின்றதாக என்ற சந்தேகம் ஏற்படுகின்றது” என்றார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...