“பாலியல் தேவைக்காகவே சிறுமியை, மறைவான இடத்துக்கு இழுத்துச்சென்றேன். அவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டார். மாமா, மாமா என கத்தினார். விடயம் வெளியில் தெரிந்துவிடும் என்பதால்தான், கை, கால்களை கட்டி சதுப்பு நீரில் அமுக்கி கொலை செய்தேன்.”
இவ்வாறு பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் பண்டாரகம, அட்டலுகம பகுதியில் 9 வயது சிறுமியை கொலைசெய்த கொலையாளி.
29 வயதான இந்த சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி தற்போதும் கர்ப்பம் தரித்துள்ளார்.
மே 27 திகதி காலை முதல் காணாமல்போயிருந்த பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமியின் சடலம் மறுநாள் சனிக்கிழமை (28) பிற்பகல் அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்டிருந்தது.
ஆயிஷா பாத்திமா எனும் குறித்த சிறுமி, நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாவார். இவர் அட்டலுகம அல்கஸ்ஸாலி மகா வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார். சம்பவ தினத்தன்று கோழி இறைச்சி வாங்குவதற்காகவே, அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சிறுமி கடைக்கு வருவதை அவதானித்துள்ள கொலையாளி, அவர் வீடு செல்லும்போது மறைவான பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளார்.
தனது தேவையை பூர்த்தி செய்ய இடமளிக்காது, சிறுமி தப்பிக்க முற்பட்டுள்ளார். இந்த விடயம் வெளியில் தெரியவந்துவிடும் என்ற அச்சத்தாலேயே சிறுமியை கொலை செய்தேன் என பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
” மாமா, மாமா என சிறுமி கத்தினாள். சாரத்தை கிழித்து கை, கால்களை கட்டி கொன்றேன். சிறுமி எங்கள் வீட்டுக்கு விளையாட வருவாள். அப்போது ஆசை ஏற்பட்டது.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரை இரு நாட்கள் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவத்தின்போது தான் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியை கொலை செய்த சந்தேக நபருக்காக எவரும் முன்னிலையாவதில்லை என களுத்துறை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
காணாமல்போன சிறுமியை குறித்த சந்தேக நபரும் இணைந்து தேடியுள்ளார். இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment