திண்மக் கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கான “பின்லா” செயற்றிட்ட அறிமுக நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இலங்கையில் கழிவு முகாமைத்துவத்தை முறையாக பேணும் பொருட்டு அரச சார்பற்ற நிறுவனங்களான செவனத மற்றும் வேல்விஷன் நிதி அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தென் பகுதியில் யாகல, வத்தளை ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அத்திட்டம் யாழ்.மாவட்டத்தின் சாவகச்சேரி நகரசபையிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் 2.36 மில்லியன் மக்கள் வாழும் நிலையில் நாளாந்தம் 2.01 பில்லியன் தொன் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன்.
இதில் உள்ளூராட்சி மன்றங்களால் 1.105 பில்லியன் தொன் கழிவுகளே சேகரிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் நாளந்தம் ஏறத்தாழ 1 பில்லியன் தொன் கழிவுகள் சமூகத்துடன் கலக்கப்படுகின்றது.
திட்டமிடப்படாத உறுதியான பொறிமுறையின்றி இவ்வாறான முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை இலங்கைத்தீவு எதிர்கொள்வதாக வளவாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர்.
அத்துடன், திண்மக்கழிவு என்பது வெறும் கழிவு அல்ல அதில் நிதி ஈட்டலுக்கான வருமானமீட்டலும் பெருமளவு அடங்கியுள்ளது. இதை உரிய பொறிமுறையூடாக முன்னெடுத்தால் பாரியளவான பொருளாதாரத்தையும் ஈட்ட முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதன் ஒரு அங்கமாகவே தற்போது சாவகச்சேரி நகர சபையிலும் இந்த திண்மக் கழிவு செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதனடிப்படையில், 20 பேரை கொண்ட சேகரிப்பாளர்கள் குறித்த செயற்றிட்டத்தை செயற்படுகின்றனர்.
நாளாந்தம் 10 தொன் கழிவுகள் சாவகச்சேரியில் மக்களால் வெளியேற்றப்படுகின்றது. ஆனால் அவற்றில் நகரசபையினால் நாளாந்தம் 7 தொன் உக்காத கழிவுகள் அகற்றப்படுகின்றன.
அத்துடன், உருவாக்கப்பட்டுள்ள குறித்த கழிவகற்றல் செயற்பாட்டின் மூலம் உக்காத பொருட்களை மீள் சுழற்சிக்கு படுத்துவதன் மூலம் மீண்டும் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய செயற்றிட்டம் இடம்பெற்று வருகிறது.
ஆகவே, குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டிற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி எதிர்கால ஆரோக்கியமான இலங்கையை கட்டியெழுப்ப முன்வர வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை கௌரவ தவிசாளர் சிவமங்கை இராமநாதன், பின்லா செயற்றிட்ட முகாமையாளர் அத்துல ரணசிங்க, நிமல் பிறேமதிலக( பின்லா), வளவாளர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் உயிரியல் இரசாயன பிரிவின் பேராசிரியர் ஜி. சசிகேசன் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மாகாண அலுவலர் சுபாஷினி சசீலன் மற்றும் யாழ். மாவட்ட செயலக ஊடகப் பிரிவினர் மற்றும் யாழ்.மாவட்ட ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment