அதிக வருமானத்தை பெற்றுக் கொள்பவர்கள் தொடர்பில் அதிகரித்த வரி அறவிடும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வரிக்கொள்கையால் குறைந்த வருமானம் பெறும் மக்களே பெரும் பாதிப்பை எதிர்நோக்க நேரும் என குறிப்பிட்ட அவர், அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அதிக வரி அறவிடும் வகையில் வரிக்கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார்.
” நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே மேற்கொள்ளவேண்டிய வேலைத்திட்டத்தை தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்ட யோசனையாக முன்வைத்துள்ளார்.
நாம் முன்வைத்துள்ள பல விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுஜன பெரமுன கட்சி எதிர்ப்பு தெரிவித்த விடயங்களே நூற்றுக்கு 80 வீதமாக இதில் காணப்படுகிறது. அதனால் இதனை எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதே பிரச்சினையாக உள்ளது.
ஜனாதிபதி அறிவித்துள்ள பொருளாதார மறுசீரமைப்புக்கு நாம் இணக்கம் தெரிவிக்கின்றோம். பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாமே ஆரம்பத்திலிருந்து கூறி வருகின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு 2020இல் நாம் தெரிவித்திருந்தோம். ஆனால் தமது சடலங்களுக்கு மேலாகவே செல்லவேண்டிவரும் என பொதுஜன பெரமுன கட்சியினர் தெரிவித்து வந்தனர். அதனால்தான் நாடு தற்போது அதல பாதாளத்துக்கு சென்றுள்ளது. எனினும் தற்போது இந்த வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
ஜனாதிபதி முன்வைத்துள்ள வரிக்கொள்கையில் எமக்கு பூரணமாக இணங்க முடியாது. வற் வரி 12வீதத்தில் இருந்து 15வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் வருமான வரியாக நூற்றுக்கு இரண்டரை வீத வரி அறவிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் வரி நூற்றுக்கு 20வரை அதிகரிக்கப்படுகின்றது. இந்த வரியால் குறைந்த வருமானம் பெறுபர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
அதிக இலாபம் பெறுபவர்களிடம் அதிக வரி அறவிடும் வகையில் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். என்றே நாம் எதிர்பார்த்தாேம். அதனால் இந்த வரிகொள்கை தொடர்பில் எமக்கு திருப்தியடைய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
#SriLankaNews
Leave a comment