30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(10) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் 18 வயதிற்கு
மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் 03 வது தடவையாக கொவிட்தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் 13.12.2021 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்; வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளது.
மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்று மாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
இரண்டு தடவைகள் கொவிட்-19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் கொவிட் தொற்றிற்கு
உள்ளானவர்கள், தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாத கால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் அல்லது ஏதாவது ஒரு கொவிட் தடுப்பூசியை இரண்டு தடவைகள் பெற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய 03வது தடுப்பூசியினை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும்.
இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்.
அவ்வகையில் மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் 13.12.2021 ஆம் திகதி முதலும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு மார்கழி மாதம் 18 ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (பைசர்) பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews