சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல் மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குழுவாக ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து சேராங்கோட்டை வரை கடற்கரை பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் பொலிஸ் நிலையத்திற்கு தனிப்பிரிவு பொலிஸார் அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில் இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5 லட்சம் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கடற்கரை பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கை ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தீஷ் எச்சரித்துள்ளார்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது கடற்றொழில் கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.