மே – 09 தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுமார் 5 மணிநேரம் இரகசியமாக வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச தங்கியிருந்த இடத்துக்கு நேற்று முன்தினம் (25) நேரில் சென்றே குற்றப் புலனாய்வு பிரிவினர், இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச பதவி விலகக் கூடாதென வலியுறுத்தியும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அலரிமாளிகையில் கடந்த 09 ஆம் திகதி கூட்டமொன்று நடைபெற்றது.
மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் செயற்பாட்டாளர்களும், அவர்களின் சகாக்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இக்கூட்டத்துக்கு வருகை தந்திருந்த, மொட்டு கட்சி உறுப்பினர்கள், கொள்ளுப்பிட்டிய (மைனாகோகம) மற்றும் காலி முகத்திடல் (கோத்தாகோகம) போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தினர். அதன்பின்னர் நாடளாவிய ரீதியில் வன்முறை வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பவித்ரா உட்பட மேலும் பல அரசியல் பிரமுகர்களிடம் சிஐடியினர் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தனர். பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவிடம் 5 மணிநேரம், வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தான் வன்முறையை ஆதரிப்பதில்லை எனவும், இவ்வாறு நடப்பது தெரிந்திருந்தால் தடுத்து நிறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment