மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது: பிரதமர்
பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சீனா விஜயத்தின்போது பிரதமர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க சீனத் தூதுவர் கியு ஷென் ஹொன் நூறு முட்டை அடைகாப்பகங்களை பிரதமரிடம் வழங்கியதுடன், இந்த இயந்திரங்கள் விவசாய அமைச்சின் ஹதபிம அதிகாரசபையால் நாடு முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
அதற்கமைவாக, அதன் ஒரு கட்டமாக குறித்த இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும உதவித்தொகை திட்டத்துக்காக தெரிவு செய்யும் நடவடிக்கைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. மேன்முறையீடுகள் தொடர்பான முதல் கட்ட விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளது.
அதற்கு இணையாக 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அதற்கான தொகையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
குறைந்த வருமானம் பெறும் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தின் காரணமாக இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் என்ற வகையில் இந்த இக்கட்டான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.
வெளிநாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்கிறோம். அந்த வகையில் கஷ்டமான நிலைமைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வளமான பூமி எங்களிடம் உள்ளது. இந்த வளம் நிறைந்த பூமியில் எது பயிரிடப்பட்டாலும் அது பலனைத் தரும்.
அதற்கான திட்டமிட்ட மற்றும் இலக்குமயப்பட்ட வேலைத்திட்டத்தை உங்கள் ஆதரவுடன் 2024இல் சாத்தியப்படுத்த முடியும். எமது நாட்டில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை பெருந்தோட்டத் தொழிலுக்கு திறம்பட மாற்றுவதற்கான திட்டங்கள் தேவை.
பயிர் செய்ய முடியுமான அனைத்து காணிகளிலும் புதிய தலைமுறையினர் கிராமங்களில் தொழில் முயற்சியாளர்களாக முன்னேறுவதற்கு இடமளிக்க வேண்டும். எமது கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் தேவை அபிவிருத்தியில் தாக்கம் செலுத்துகிறது. உலகிலேயே சிறந்த கறுவா உற்பத்தி செய்யும் நாடு எமது நாடு.
அதற்கு வெளிநாடுகளிடமிருந்து அதிக கேள்வி உள்ளது. பலரும் பல விடயங்களை சொன்ன போதிலும் நாட்டை கடந்த ஆண்டில் உணவில் தன்னிறைவு அடையச் செய்ய முடிந்தது. நாம் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.
Comments are closed.