பிரேமநாத் சி.தொலவத்த மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் பாராளுமன்றத்தில் எழுப்பிய சிறப்புரிமைக் கேள்விகள் நீதித்துறையின் சுயாதீனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஊடக அறிக்கை மூலம் உறுதியளித்துள்ளது.
நீதிமன்ற சுயாதீனம் என்பது இலங்கை மக்களின் உரிமை எனவும் பிரஜை மற்றும் அரசுக்கு இடையிலான மற்றும் பிரஜைகளுக்கு இடையிலான நீதியை உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான நீதித்துறை அவசியம் என்பதை அனைத்து அரச நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திறைசேரி செயலாளர் மீதான உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி பிரேமநாத் சி.தொலவத்த சிறப்புரிமை கேள்வி எழுப்பினார்.
இது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்தே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், இவ்விடயம் குறித்து எதிர்க்கட்சிகளும் அச்சம் தெரிவித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment