இலங்கை
பஸ், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்?
பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், இன்று (17) தெரிவித்தார்.
கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனின், முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கும் எரிபொருளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது, வாராந்தம் வழங்கும் 5 லீற்றர் பெற்றோலை நாளாந்தம் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.
எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைத்தாலும் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு பெற்றோலை கொள்வனவு செய்ய நேரிடும் என்பதால், விலையை குறைப்பதால் தமக்கு எந்த நன்மையும் இல்லை என்றார்.
பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா, இன்று (17) தெரிவித்தார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனின், ஒரு லீற்றர் டீசலின் விலையை 4 சதவீதம் அல்லது அதற்கு மேல் குறைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
430 ரூபாவாக இருந்த டீசலின் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதால், அது 4 சதவீதத்தை விட குறைவான விலைக்குறைப்பு என்றும் பஸ் கட்டணத்தைகுறைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login