அரசியல்
ஜனாதிபதி – ஐமச சந்திப்பு வெள்ளியன்று!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாரான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று மாலை இந்த தகவலை வெளியிட்டார்.
அரசமைப்பு, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவருக்கு, ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார்.
அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.
சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
” நாட்டில் தற்போதைய நிலைவரம், கைது வேட்டை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அறிவித்தார்.
சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் என்பன இரு வேறு திட்டங்களாகும். சர்வக்கட்சி அரசியல் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாட செல்கின்றது.
You must be logged in to post a comment Login