நாட்டில் நிலவும் நிதிநெருக்கடியை கவனத்திற்கொண்டு மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையத்தை மூடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக விமான சேவைகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
அதுதொடர்பில் கருத்து தெரிவித்த விமான சேவைகள் அமைச்சின் உயரதிகாரி – பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மேற்படி விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
அதேவேளை, குறிப்பிட்டளவு விமானங்கள் இந்த விமான நிலையங்களுக்கு வருகை தராமையால் அந்த விமான நிலையங்களைத் தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தற்போது பெரும் சிக்கல்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
குறிப்பாக மேற்படி இரண்டு விமான நிலையங்களினதும் ஊழியர்கள் மற்றும் ஆளணியினரைக் கொண்டு நடத்துவது மற்றும் ஏனைய செலவுகளை மேற்கொள்வதில் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் சேவைகளுக்காக ஊழியர்களை அழைத்துச் செல்வதற்கு சொகுசு பஸ் வண்டியொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தினமும் மத்தள விமான நிலையத்துக்கு போக்குவரத்தை மேற்கொள்வதானது பெரும் செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்ற ரத்மலானை விமான நிலையமும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே இயங்குகின்றது.
இரத்மலானை விமான நிலையம் அண்மையில் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டது. எனினும் அன்றைய தினம் வெள்ளோட்டமாக மாலைதீவின் மக்கள் விமானம் ஒன்று வருகை தந்தது. எனினும் அவ்விமானம் மீண்டும் பயணிகளின்றி வெற்று விமானமாகவே சென்றுள்ளது. அன்றைய தின நிகழ்விற்காக 80 இலட்சம் ரூபா செலவு ஏற்பட்டுள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment