பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எந்தவிதமான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாதமை மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
உயித்.என்.பி.லியனகே தெரிவித்தார்.
இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் எவருக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பொலிஸ் அதிகாரிகளுடன் முரண்படாமல் அன்றாடச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
யாழ்மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள். எனவே பொலிஸ் திணைக்களம் என்ற ரீதியில் யாழ்ப்பாண மக்களுக்கு நாங்கள் நன்றி கூறக கடமைப்பட்டிருக்கின்றோம்.
மேலும், தற்போது கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஆரம்பித்தள்ளது. யாழில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போது பரீட்சைக் காலம் என்பதனால் யாழிலுள்ள ஆலயங்களின் திருவிழாக்களின் போது ஒலிபெருக்கி சத்தத்தினை குறைத்து போடுவதன் மூலம் இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தற்போதைய பரீட்சை காலங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களில் ஒலி பெருக்கிகளின் பாவனைக்கு தடைவிதித்திருக்கின்றோம். நிபந்தனைகளுடன் மாத்திரமே சகலருக்கும் பொலிஸ் ஒலிபெருக்கி அனுமதியினை வழங்குகின்றோம்
யாழில் குற்றச்செயல்கள் சில இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்திருக்கிறார்கள்.எனினும் சில சம்பவங்களுடன்
தொடர்புபட்டவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
எனவே யாழில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு பொலிசாருக்கு கிடைக்கப்பெற்றால் புதிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் – என்றார்
#SriLankaNews
Leave a comment