அரசியல்
பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் – டக்ளஸ் வாழ்த்து
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாநாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 6 ஆவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இருக்கின்ற அனுபவமும் சர்வதேச உறவுகளும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இலகுபடுத்தும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டு இருக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login