அரசியல்
அரசு பொறுப்புக்கூற வேண்டும்! – ஜீவன் வலியுறுத்து
“மக்களால் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்களின்போது பொலிஸார் வன்முறையைக் கையில் எடுத்துள்ளமையானது கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது.
ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சு பதிலளித்தே ஆக வேண்டும்.
நாட்டில் ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதை இ.தொ.கா பார்த்துக்கொண்டிருக்காது.
நாட்டில் இன்று உயிர்ச் சேதம் ஏற்படும் அளவுக்கு இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அரசு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” – என்றார்.
You must be logged in to post a comment Login