யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றிய பெண் ஒருவர் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தனர்.
அதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போது, பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே, முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம், குறித்த முன்னாள் மாணவியுடன் ( முறைப்பாடளித்த ) உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. அந்த ஒளிப்பதிவுகளின் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்நிலையிலையே, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி, தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி, அவரது நண்பியான முன்னாள் மாணவி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப், டிக்டொக், பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுரித்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதில், முதலாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் எதிர் மனுதாரர்கள் சமூக வலைத்தளங்களில் பேராசிரியர் ரகுராம் தொடர்பாக, பதிவு செய்துள்ள அவதூறான பதிவுகளை நீக்குவதோடு, இத்தோடு தொடர்புபட்ட எந்தவொரு விடயங்களையும் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்யக்கூடாது என இடைக்கால கட்டளையிடபட்டத்துடன், எதிர்மனுதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்ப கட்டளையிட்ட நீதிமன்று, எதிர் மனுதரர்களின் காரணங்காட்டுதலுக்காக வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.