பண்டாரநாயக்காவுக்கு ஒரு சட்டம் திலீபனுக்கு ஒரு சட்டமா?

தியாக தீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமீறல். ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார நடைமுறையா?

இதுதான் அரசின் இனநல்லிணக்கத்தின் வெளிப்பாடா? அனைவரும் ஒற்றுமையாக தேசத்தை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ஐ.நாவின் உரையில் ஒற்றுமை வெளிப்படுகின்றதா? இதுதான் அரசின் இனரீதியான அணுகுமுறையா?

இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 34வது தினம் கடைப்பிடிக்க அவரின் சிலைக்கு அண்மையில்கூட செல்ல முடியாது தடுக்கப்பட்டோம்.

அஞ்சலி செலுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறினார் எனும் குற்றச்சாட்டில் காட்டுமிராண்டித்தனமாக கைதுசெய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் இராணுவத்தினரும் பொலிஸார் நினைவுகூர்தலுக்கு தடைகளை ஏற்படுத்தினர்.

ஆனால் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் 62வது நினைவுதினம் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்க சமாதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர் எனப் பெருமளவானோரின் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலி நடைபெற்றுள்ளது.

அவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை அஞ்சலிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தமிழர்களின் நினைகூரலை மாத்திரம் தடுக்கின்றது என்பதே எமது பிரச்சினை.

தனிமைப்படுத்தல் சட்டத்தை தமக்குப் பிடிக்காத விடயங்களுக்கு அரசு பயன்படுத்துகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

88

தொடர்புடைய செய்தி:

பண்டாரநாயக்கவின் நினைவு தினம் இன்று!

 

Exit mobile version