தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து 14 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 9 மாவட்டங்களில் உள்ள 56 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 1,091 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 நிவாரண முகாம்களில் 523 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 195 பேரும், உறவினர் வீடுகளில் 224 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் பிரதான வீதிகளில் ஏற்பட்ட தடங்கல்கள், சீரமைக்கப்பட்டு மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
அவற்றுள், கடுகண்ணாவ பகுதியில் மூடப்பட்டிருந்த கொழும்பு – கண்டி வீதி மீண்டும் திறக்கப்பட்டு, போக்குவரத்து முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளது.
இருப்பினும், நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன் மற்றும் நுவரெலியா – கண்டி (டொப்பாஸ் முதல் லபுக்கலை வரை) பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி நிலவுவதால், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.