தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் உரத்தைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். குறிப்பாக தென் பகுதியிலும் இந்தப் பிரச்சினையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக தென் பகுதியில் அரசுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், விவசாய அமைச்சரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் ஓரிடத்தில் ஒன்று சேர்வது நல்ல விடயம் அல்ல. அது சமூகப் பொறுப்புக்கும் மாறானது என்பதைக் கருத்தில்கொண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் முன்னால் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மாத்திரம் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் .
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 28 கமநல சேவை நிலையங்கள் இருக்கின்றன. அனைத்து நிலையங்களுக்கு முன்னாலும் எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி காலை 9 மணிக்கு சமூகப் பொறுப்போடு சமூக இடைவெளியைப் பின்பற்றி தற்போது விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் கவனவீர்ப்பு போராட்டத்தை செய்யவுள்ளோம்.
தெற்கில் உள்ள ஏனைய எதிரணி அரசியல் தலைவர்களுடன் பேசியுள்ளோம். அவர்களும் தங்களுடைய பிரதேசங்களிலும் இவ்வாறான பிரச்சினை காணப்படுகின்றது எனவும், தொடர்ச்சியாக தமது பகுதியில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதாவது எமக்கு பசளை கிடைக்கும் வரை இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க நாம் தீர்மானித்துள்ளோம்.
அதேபோல் வடக்கு மீனவர்கள் அத்துமீறிய இந்திய இழுவைப் படகுகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
குறித்த இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்துவதற்கு ஏற்கனவே சட்டமூலம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதனை அரசு நடைமுறைப்படுத்தத் தயங்குகின்றது. குறிப்பாக கடற்தொழில் அமைச்சராக ஒரு தமிழர் இருந்தும், அவர் அதனை நடைமுறைப்படுத்துவது மிகவும் இலகுவான விடயம்.
ஆனால், அவர் அதனைச் செயற்படுத்தாததன் காரணமாக இந்திய இழுவைப் படகுகளின் தொல்லை வடக்கு பகுதியில் மீனவர்களைப் பெரிதாகப் பாதிக்கின்றது.
எனவே, குறித்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 17ஆம் திகதி முல்லைத்தீவு கடலில் இருந்து பருத்தித்துறைக்குக் கடல் வழியாக வந்து அமைச்சருக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளோம். அனைத்துப் போராட்டங்களுக்கும் எமது மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்” – என்றார்.
Leave a comment