எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி உள்ளதாகவும் விலை அதிகரிக்க உத்தேசம் உள்ளதா என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும்போதே நிதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால் அது குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்றோ அதிகரிக்கப்படாது என்றோ நிதியமைச்சர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை, மத்திய வங்கியால் தொடர்ச்சியாக பணம் அச்சிடப்படுவது தொடர்பிலும் இதன்போது கேள்வி எழுப்பட்டது.
” பணம் அச்சிடுவது தற்போதைக்கு நிறுத்தப்படாது, தனது கையெழுத்திட்ட பணம் வெளிவரும் வரை அது தொடரட்டும்.” – எனவும் நகைச்சுவையாக அமைச்சர் குறிப்பிட்டார்.
#SriLankaNews