விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை: ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் உத்தரவு

LTTE Flag

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச பயங்கரவாத அமைப்பு என ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டினை இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் இந்த மேன்முறையீட்டை செய்திருந்தனர்.

இதேவேளை குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கடந்த 2006 ஆம் ஆண்டில் தடைப் பட்டியலில் இணைக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் மீண்டும் சேர்த்தது.

இதனை நீக்குமாறு கோரி இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Exit mobile version