அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தற்சமயம் கைது செய்யப்படமாட்டாரென சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மனு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர், குறித்த விடயத்தை உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால், தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அருட்தந்தை சிறில் காமினிக்கு அண்மையில் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அவர் அந்தத் திணைக்களத்தில் முன்னிலையாகவில்லை. அவருக்குப் பதிலாக அருட்தந்தையர்கள் 3 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகினர்.
இதன்போது குறித்த மூவரும், வாக்குலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினிக்கு ஒரு வாரக் கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்டயப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.
#SrilankaNews