தேசிய விவசாயக் கொள்கை அறிக்கையை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஆலோசனைக்கு அமைவாக, முதன் முறையாக தொகுக்கப்பட்டுள்ள தேசிய விவசாயக் கொள்கை அறிக்கை, அடுத்தவாரம் அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காக சமர்பிக்கப்படவுள்ளதாக, விவசாய அமைச்சின் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய விவசாய கொள்கையை வகுப்பதற்கான குழுவினால் தயாரிக்கப்பட்ட விவசாயக் கொள்கையின் சிங்கள, ஆங்கில பிரதிகள், விவசாய அமைச்சருக்கு நேற்று வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துரைத்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,
‘தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்துக்குள், தேசிய விவசாயக் கொள்கை தயாரிக்கப்பட்டமை நினைத்து மகிழ்வடைகிறேன்.
இறக்குமதி பொருளாதாரத்துக்குப் பதிலாக உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை வழிநடத்துவதில் விவசாய அமைச்சர் என்ற முறையில் எனக்கு அதிக பங்கு உண்டு.
தேசிய விவசாயக்கொள்கையானது, இலங்கை மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்யும். அத்துடன், நச்சுத் தன்மையற்ற உணவு உண்ணும் முறைமைக்கு வழிகாட்டும்.
விவசாய உற்பத்தி மற்றும் மூலப்பொருள் உற்பத்தி மூலம், கிராம அளவில் சுயதொழில்களை வலுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும்’ குறிப்பிட்டார்.
இதேவேளை, தேசிய விவசாய கொள்கையின் மூலம், இலங்கையை நிலைபேறான பசுமையான வலயமாக மாற்றி அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, மக்களும் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட முடியும்’ என்று, விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Leave a comment