நோட்டீஸ் அனுப்பி 2 நாள் முடிஞ்சிருச்சு.. மன்னிப்பும் வரல, நஷ்ட ஈடும் வரல.. த்ரிஷா அதிருப்தி..!
நடிகை த்ரிஷா குறித்து முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு என்பவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
24 மணி நேரத்தில் முன்னணி ஊடகம் ஒன்றின் மூலம் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் த்ரிஷா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நோட்டீஸ் அனுப்பி இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் ஏவி ராஜு த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, எந்த ஊடகம் மூலமும் அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. அதேபோல் நஷ்ட ஈடு குறித்தும் ஏவி ராஜு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால் த்ரிஷா தரப்பில் தற்போது அதிருப்தியில் இருப்பதாகவும் அடுத்த கட்டமாக ஏவி ராஜு மீது வழக்கு தொடர ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம், இதனால் தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு தான் சிக்கல் என்று அவருடைய ஆதரவாளர்கள் ஆலோசனை கூறியதாகவும், இதனை அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் த்ரிஷா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஏவி ராஜு திமுக அல்லது பாஜகவில் சேர பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாகவும் ஒரு வதந்தி உலாவி கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் த்ரிஷா அடுத்து என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.