தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், அவருடைய எதிர்கால லட்சியம் மற்றும் சினிமா பயணம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சினிமாவில் எனது ரசிகர்களின் மனதில் எப்போதும் நினைவில் நிற்கக்கூடிய வகையிலான நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எனது முதன்மையான லட்சியம்” என்று மிகவும் எளிமையாகத் தெரிவித்துள்ளார்.
சினிமா வாழ்க்கையைத் தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை லட்சியம் குறித்தும் அவர் இதன்போது மனம் திறந்து பேசினார். “திரையுலகில் சாதிப்பதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஒரு அன்பான மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதும் எனது ஆசையாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையின் ஓட்டத்தில் எப்போதாவது நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, அந்த நினைவுகள் நமக்கு உண்மையான மகிழ்ச்சியையும், மன அமைதியையும், முழுமையான திருப்தியையும் தர வேண்டும் என்றும், அத்தகையதொரு வாழ்வை நோக்கியே தனது தற்போதைய பயணம் அமைந்துளது என்றும் அவர் விவரித்துள்ளார்.
தற்போது தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திலும், சூர்யாவுடன் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திலும் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அவர், தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தித் தனது நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகப் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கும் போது மொழியைக் கடந்து அந்தப் பாத்திரமாகவே மாறுவது ஒரு சிறந்த கலைஞனின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சினிமாவில் தற்காலிக வெற்றிகளைத் தேடாமல், வாழ்நாள் முழுக்க அமைதியுடனும் திருப்தியுடனும் வாழ்வதையே தனது இறுதி லட்சியமாகக் கொண்டுள்ளதாக மமிதா பைஜூ கூறியிருப்பது அவரது முதிர்ச்சியைக் காட்டுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நடிகை மமிதாவின் இந்த நேர்காணல் விபரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது லட்சியங்கள் நிறைவேறப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

