நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (09) வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் (Censor Certificate) கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களே இதற்குக் காரணமாகும்.
தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவிய இழுபறி காரணமாக, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். (KVN Productions) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அதன் தீர்ப்பை நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.
தீர்ப்பு தள்ளிப்போனதைத் தொடர்ந்து, நாளை படம் வெளியாகாது என்பதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
படம் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில், நடிகர் சிம்பு (STR) தனது எக்ஸ் (X) பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்:
“அன்புள்ள விஜய் அண்ணா, இந்த பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை. இதைவிடப் பெரிய புயல்களையே நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்குகிறது.”
சிம்புவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், விஜய் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.