அதிமுகவில் கெளதமி.. கமல் போட்டியிடும் தொகுதியில் களமிறக்க திட்டமா?

tamilni 298

அதிமுகவில் கெளதமி.. கமல் போட்டியிடும் தொகுதியில் களமிறக்க திட்டமா?

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு கட்சியில் உள்ள பிரமுகர் இன்னொரு கட்சிக்கு தாவி வருவது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் பாஜகவில் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக விலகிய நடிகை கௌதமி நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் சேர்ந்து உள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனக்கு ஜெயலலிதா மீது நல்ல மரியாதை உண்டு என்றும் அவர் துணிச்சலாக எந்த ஒரு முடிவையும் எடுப்பார் என்றும் அது மட்டுமின்றி ஜெயலலிதாவுக்கு பின் அதிமுகவை கட்டுக்கோப்பாக எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார் என்றும் அதனால் தான் அவருடைய கட்சியில் இணைந்தேன் என்றும் கௌதமி பேட்டி அளித்துள்ளார்.

முன்னதாக பாஜகவில் இருந்த போது அவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி வாய்ப்பு கேட்டிருந்ததாகவும் ஆனால் அண்ணாமலை அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நில மோசடி வழக்கில் பாஜக தனக்கு உதவவில்லை என்ற அதிருப்தியில் இருந்த கௌதமி ஒரு கட்டத்தில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ள கௌதமிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக அதிமுக தரப்பில் இருந்து உறுதி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதியில் நீங்கள் போட்டியிடுங்கள், அந்த தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் என்று அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகவும் அதற்கு கௌதமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

எனவே திமுக கூட்டணியில் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் கௌதமி போட்டியிடுவார் என்று கூறப்படுவதால் மக்கள் நீதி மய்யம் வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version