சினிமா
‘மூப்பில்லா தமிழே தாயே’ – தமிழின் பெருமையை மீண்டும் உலகறிய வைத்த ஏ.ஆர்.ரகுமான்
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஒஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் .தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இவர்.
தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழியின் சிறப்பினை உணர்த்தும் விதமாக ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
மார்ச் 24ம் திகதி டுபாய் எக்ஸ்போ-வில் இடம்பெற்ற ரகுமானின் கச்சேரியில் இந்த பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பாடல் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகிய தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல், பழங்காலத் தமிழர் பண்பாட்டையும், உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடும்விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.
கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை வரிகளால் உருவாக்கப்பட்டுள்ள பாடல் வரிகள் இளைய தலைமுறையினரை தமிழ் பண்பாட்டு வேருடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, வெளிவந்துள்ள இந்த பாடலை சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ், பூவையார், ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார் மற்றும் நகுல் அப்யங்கர் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து பாடியுள்ளனர்.
தமிழினத்துக்கு தமிழர் பெருமைகளையும் தத்ரூபமாக தனது இசையில் வெளிக்கொண்டு வந்துள்ள இந்த பாடல் தற்போது யூடியூப்பில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது.
You must be logged in to post a comment Login