கட்டுரை

ரஸ்யா – உக்ரைன் போர் | நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன? – Part 3 – சி.விதுர்ஷன்

Published

on

பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்யா பயணம்

உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கூட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா பயணம் பல்வேறு நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது.

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு மத்தியிலும், இம்ரான் கான்- விளாடிமிர் புடின் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் பயணத்தின் போது, இம்ரான் கான், ரஷ்ய நிறுவனங்களுடன் இணைந்து நீண்டகால தாமதமான, பல பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய் அமைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதை பயணத்தில் நோக்கமாகக் கொண்டுள்ளார் என்று பாகிஸ்தான் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இது ரஷ்யாவுக்கு மறைமுகமான ஆதரவாக இருக்கும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

போரில் யாருக்கு பலம், யாருக்கு பலவீனம்

படையெடுப்பு தொடங்கி விட்ட நிலையில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ வல்லமை என்ன? என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும். அது போரின் வெற்றி, தோல்வியை கணிக்க உதவும். உலக நாடுகளின் ராணுவ வல்லமையை மதிப்பிடும் ‘குளோபல் பயர் பவர்’ எனும் இணையதளம் மற்றும் உலக நாடுகள் இடையிலான போர், பதற்றம், புவிசார் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை குறித்து ஆராயும் இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ஸ்ட்ரேட்டஜிக் ஸ்டடீஸ் எனும் ஆய்வு நிறுவனத்தின் வருடாந்திரப் பதிப்பான ‘தி மிலிட்டரி பேலன்ஸ்’ ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இரண்டு நாடுகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து ஆராய வேண்டும்.

1. உக்ரேன் பாதுகாப்பு படைகளில் இருக்கும் மொத்த துருப்புகளின் எண்ணிக்கை 11 லட்சம் பேர் ரஷ்யாவில் பாதுகாப்பு படைகளில் இருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை 29 லட்சம் பேர். இவர்கள் அனைவருமே இப்போது பணியில் இருப்போர் அல்ல.

2. உக்ரேனில் தற்பொழுது களத்தில் பணியாற்றுவோர் எண்ணிக்கை இரண்டு லட்சம் பாதுகாப்பு படையினர். ஆனால் இதே எண்ணிக்கை ரஷ்யாவில் ஒன்பது லட்சமாக உள்ளது.

3. உக்ரேனில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் துருப்புகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சம் பேர். ரஷ்யாவில் இதே எண்ணிக்கை 20 லட்சம் பேர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு நாடுகளின் பாதுகாப்பு படைகளில் இருந்தும் பணி ஓய்வு பெற்றவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

4.தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய விமானங்கள் உக்ரேனிடம் 98 மட்டுமே உள்ளன. ரஷ்யாவிடம் 1511 விமானங்கள் உள்ளன.

5.தாக்குதலில் பயன்படுத்தக்கூடிய ஹெலிகாப்டர்கள் உக்ரேனிடம் 34 உள்ளன. ஆனால் ரஷ்யாவிடம் 544 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

6. உக்ரேன் ராணுவத்திடம் 2596 டாங்கிகளும், ரஷ்யாவிடம் 12,240 டாங்கிகளும் உள்ளன. உக்ரேன் பாதுகாப்புப் படைகளின் வசமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 12,303. இதுவே ரஷ்யாவின் பாதுகாப்புப் படைகள் இடமிருக்கும் கவச வாகனங்களின் எண்ணிக்கை 30,122.

7. நிலத்தில் வாகனங்கள் மூலம் கட்டி இழுத்துச் செல்லக்கூடிய சேணேவிகள் (towed artillery) உக்ரேன் படைகளிடம் 2,040 உள்ளன் இவை ரஷ்யாவிடம் 7,571 உள்ளன. இந்த அடிப்படையில் ரஷ்யா உக்ரைனை விட பலமடங்கு பலம் வாய்ந்த இராணுவ படையினரையும், போர் உபகரணங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

போரினால் இலங்கைக்கு என்ன நட்டம்?

உக்ரைன் – ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனில் ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து உக்ரைனுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதன் காரணமாக தற்போது இலங்கைக்கு வந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இலங்கை, உக்ரைன் உட்பட ரஷ்ய பிராந்தியத்தில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், இலங்கையின் தேயிலை கொள்வனவாளர்களில் உக்ரைனும் ரஷ்யாவும் முன்னணியில் உள்ளனர். இதனால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

அதேவேளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளுக்கு அமைய 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு 82 ஆயிரத்து 327 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் அதிகளவானோர் ரஷ்யாவில் இருந்து வந்துள்ளனர். 13 ஆயிரத்து 478 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இது மொத்த தொகையில் 16.4 வீதமாகும். சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இலங்கைக்கு வந்த ஏனைய நாடுகள், இந்தியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகியனவாகும். இதனிடையே இலங்கையின் தேயிலையை கொள்வனவு செய்யும் பிரதான கொள்வனவாளர்களாக ரஷ்யாவும் உக்ரைனும் உள்ளன.

இதன் காரணமாக இலங்கைக்கு அந்நிய செலவாணி கிடைக்கும் மற்றுமொரு வழியும் குறுகிய அல்லது நீண்டகாலத்திற்கு இல்லாமல் போகலாம். இலங்கையின் உற்பத்தி ஏற்றுமதி சந்தைகளான ரஷ்யா, உக்ரைன் அதேபோல் ஐரோப்பாவிலும் இலங்கை இந்த சிக்கலை எதிர்நோக்க நேரிடும் எனவும் கலாநிதி உடஹேவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உக்ரைனில் அதிகரிக்கும் வன்முறை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய–உக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் எனவும் யுத்தத்தினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை இரு நாடுகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் “நாங்கள் ஏற்கனவே 90 டொலர்களுக்கு வாங்கியதற்கு அமெரிக்க டொலர்களை ஒதுக்க போராடி வருகிறோம். கச்சா விலை விரைவில் 115 அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை எவ்வாறு எண்ணெயை கொள்வனவு செய்யப் போகிறது என்பது பாரிய சவாலாக உள்ளது” என First Capital நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் தெரிவித்தார்.

“இது ஒரு பெரிய போராக வெடித்தால் சுற்றுலா மற்றும் தேயிலை கூட பாதிக்கப்படலாம்.” என்றார். ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது, முக்கியமாக அதன் கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு விற்கிறது.

மேலும் ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயுவின் மிகப்பெரிய வழங்குனராகும், அதன் விநியோகத்தில் சுமார் 35 சதவீதத்தை வழங்குகிறது மற்றும் ஒரு போர் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

#World

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version