20
செய்திகள்இலங்கை

தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த

Share

தேசத்தின் ஒற்றுமையிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – ஜி-20 மாநாட்டில் பிரதமர் மஹிந்த

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்றைய முதலாவது அமர்வில் உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜி-20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 மற்றும் 31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜி-20 சர்வமத மாநாடு இடம்பெறுகிறது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜி-20 சர்வமத மாநாட்டில் உரையாற்றினார்.

200

மாநாட்டில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

‘கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களிடையே புரிதல்’ எனும் தொனிப்பொருளில் வரலாற்று சிறப்புமிக்க போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இம்மாநாட்டின் தொனிப்பொருள் குறிப்பாக எனது நாடான இலங்கைக்கும் தெற்காசியாவின் புவியியல் வலயத்துக்கும் பொருத்தமானதாக காணப்படுவதால் இச் சந்தர்ப்பத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

இன, மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பவை எமது பிராந்தியத்தின் முக்கிய அம்சமாகும். எமது நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளை கொண்ட மக்கள் வசிக்கின்றனர். எனினும், இவ் வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம்.

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது.

தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன நமது யுகத்தின் மிக முக்கியமான சவால்களாகும். சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் சோகமான சம்பவங்களை இங்கே நாம் நினைவுகூர வேண்டும். குற்றவாளிகள் மற்றும் அவர்களால் கூறப்படும் நோக்கம் என்னவாக இருப்பினும் இச்சம்பவம் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

எமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளின் ஊடாக வேறுபாட்டை ஏற்படுத்தும் விடயங்களை விட, ஒருமைப்பாடுள்ள சகல மதங்களினதும் பொது விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடமையாக அமைய வேண்டும்.

நவீன தேவைகளுக்கேற்ப கல்வியின் உள்ளடக்கத்தை திருத்துதல் மற்றும் எமது இளைஞர்களை திருப்திகரமான வாழ்வாதாரத்தை நோக்கி ஈடுபடுத்துவதற்கே இலங்கை அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளது.

முழு உலகமும் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி, நம் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது.

கொவிட் 19 நெருக்கடியானது பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் நாகரிகங்கள் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் மரண அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றிலிருந்து தப்பித்து மீண்டும் நமது வாழ்வை ஆரம்பிக்க வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.

நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் பிற பாதுகாப்புகள் உலகம் முழுவதும் காணப்பட வேண்டியதுடன், சர்வதேச அமைப்பு மற்றும் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு பொருளாதார ரீதியில் வலுவற்ற நாடுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது சிலர் மாத்திரமன்றி அனைவரும் வெற்றி பெறுவதற்கான போராட்டமாகும்.

தொற்று காரணமாக நாடுகள் தமது எல்லையை தற்காலிகமாக மூடுவது உகந்தது என்ற போதிலும், தனிமைப்படுத்தல் என்பது அதற்கு தீர்வல்ல.

வீடுகள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் சமூகத்தில் திருட்டில் ஈடுபடல் மற்றும் பல்வேறு பாகுபாடுகளுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் எமது அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் உள்ளது. மனித கடத்தலை முற்றிலும் ஒழிப்பதே எமது அணுகுமுறையாகும்.

காலநிலை மாற்றம் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் நாம் முக்கியத்துமளித்து செயற்பட்டு வருகின்றோம். மனிதவள அபிவிருத்தி தொடர்பில் ஒரு சீரான அணுகுமுறையை பின்பற்ற இலங்கை முயற்சித்து வருகிறது. வேகமாக வளர்ச்சியடையும் மக்கள் தொகைக்கு ஆதரவளிக்க பொருளாதார பிரச்சினைகள் குறித்த முன்னேற்றம் அவசியமான போதிலும், நிலவும் சூழலில் அது முடியாததொரு விடயமாகும்.

நல்லிணக்கம் என்பது நம் காலத்தின் முக்கியமான தேவையாகும். மோதல்களும் நம்மைச் சுற்றி அதிகரித்து வரும் இடையூறுகளும் பொதுவானவை. எங்களுடன் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுகிறது.

ஐரோப்பாவின் பழமையான கற்றல் மையமான போலோக்னாவில் நடைபெறும் இந்த உற்சாகமூட்டும் மாநாடு அதற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளிக்கிறது. ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜி 20 சர்வமத மாநாடு, கலாசாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கான ஒரு அரிய வாய்ப்பாகும். – என்றார்.

j20

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...