ரணிலின் திட்டம்!
இலங்கையின் பொருளாதார நிலமை செப்டெம்பர் மாதத்துக்குள் ஸ்திரமடையும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்களுக்கான கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வர்த்தக சபை உறுப்பினர்கள், வர்த்தக சமூகம் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் (29.06.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்துக்குள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடையும் என்று நம்புகின்றோம்.
இதற்கிடையில், தனிநபர்கள் மற்றும் தொழில்துறையினர் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் வகையில் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் , மக்களுக்கும் தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.
பரவலான விளக்கங்களை வழங்குவதன் மூலம், வர்த்தக பங்குதாரர்களுக்கு மறுசீரமைப்பின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். இந்த மறுசீரமைப்பு முயற்சியின் முதன்மையான விளைவாக எதிர்பார்க்கப்படுமளவுக்கு வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும்.
இதற்காக குறிப்பிட்டவொரு காலப்பகுதியைக் குறிப்பிட்ட முடியாது என்ற போதிலும், சில மாதங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
Leave a comment