Wimal Kamanpila Vasudeva Gottapaya
கட்டுரைஅரசியல்அரசியல்இலங்கைசெய்திகள்

இனி சுட்டமண் நிலைமைதான்; ஒட்டுவதற்கு வாய்ப்புக் குறைவு!

Share

அரசுக் கூட்டுக்குள் குழப்பம் வெளிப்படையாக அம்பலமாகிவிட்டது. இனி, சுட்டமண் நிலைமைதான். ஒட்டுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்த முரண்பாடும், பிளவும் இந்த மட்டத்துடன் அடங்கப் போவதில்லை. மேலும், பிளவுகள், பிரிவுகள், முரண்பாடுகள் வெடிக்கலாம் என்றே தெரிகின்றது.

அரசுக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் பதினொரு கட்சிகளைச் சேர்ந்தோர், ஆளும் தரப்பில் தாங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று தெரிவித்து ஏற்கனவே அதிருப்திக் கொடியைத் தூக்கி விட்டனர்.

அந்தப் பதினொரு கட்சிகளில் இரண்டு கட்சிகளின் தலைவர்களே அமைச்சரவையில் இருந்து விலக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மூன்றாவது பிரமுகரான வாசுதேவ நாணயக்கார வெளியேற ஆயத்தமாக மூடை முடிச்சுகளைக் கட்டிவிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்த நடவடிக்கை பதினொரு கட்சிகளின் அதிருப்திக் கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்துமா அல்லது அதிருப்திப் போக்கைத் தீவிரப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே அதிருப்திக் கூட்டுக்குள் கெம்பிக் கொண்டு நின்ற சு.க. தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சு.கவின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர போன்ற எம்.பிமார், இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்கிய அதிரடி நடவடிக்கையைப் பார்த்து வாயடைத்து அடங்கி விடுவரா அல்லது தங்களது அதிருப்தி அணிக்கு இந்த இருவரும் அமைச்சர் பதவியை இழந்த வெறுப்போடு வருவது தங்களது தரப்பை பலமடையச் செய்வதாகக் கருதி உற்சாகமடைவரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட வீமல் வீரவன்சவும் உதய கம்மன்பில்லவும் தங்கள் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.

கோட்டாபயவையும், பஸிலையும் இலக்கு வைத்துத் தங்கள் பிரசார பீரங்கியை முழங்கத் தொடங்கிவிட்டார்கள். ஆரம்பமே இப்படி என்றால் இருவரும் எகிறும்போது நிலைமை படு சூடாகவே இருக்கும்.

இதில் விமல் வீரவன்ஸவுக்கும் அவரது மனைவிக்கும் எதிரான சில, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

விமல் வீரவன்ச அதிகம் துள்ளிக் குதித்தால், இலங்கையின் அரசியல் போக்கின் வழக்கப்படி ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என எதிர்பார்க்கலாம்.

பெரிய அரசியல் குழப்பம் ஏதும் பண்ணாமல், அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், ஆளும் கூட்டமைப்புக்குள் தொடர்ந்து நீடிக்கும் பாணியில் விமல் வீரவன்ச அமுக்கி வாசிப்பாராயின் ‘சட்டம் தன் வழமைப்படி தூங்கிக் கிடக்கும்.’

எப்படி என்றாலும் இந்த விளைவுகளும், முரண்பாடுகளும் தனித்து நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு
பங்கு பெரும்பான்மை என்ற பலத்தை அரசிடமிருந்து வலுவாக இழக்கச் செய்து வருகின்றன என்பது கண்கூடு. அதனால், கோட்டாபய அரசு தன்னிஷ்டப்படி நாட்டுக்குப் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் வலுவையும் இழந்து வருகின்றது என்பது திண்ணம்.

அரசுத் தரப்பில் கணிசமானோரின் ஏக ஆதரவை அரசுத் தலைமை இழந்து வருகின்றமையால், இனி ஒரு புதிய அரசமைப்பை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதாயின், குறைந்த பட்சம் எதிர்க்கட்சித் தரப்பில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளினதும் முழு ஆதரவையாவது அதற்கு ஆளும் கூட்டமைப்பு பெற்றாக வேண்டும்.

இது புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஆளும் தரப்புக்குச் ‘செக்’ வைக்கும் விடயமாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது.

– ‘காலைக்கதிர்’ காலைப் பதிப்பு ஆசிரியர் தலையங்கம் (05.03.2022)

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...