இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான காரணங்களையும், தீர்வுக்கான வழிகளையும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அணி இதற்கு முன் உலகக் கிண்ணங்களை வென்றதற்கு திறமையுடன் ஒழுக்கமும், முறையான தயார்படுத்தலும் காரணமாக இருந்தன என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அணி ஒரே சீரான ஆட்டத்திறனைப் பேணத் தவறுதல், குறுகிய காலத் தீர்வுகளைத் தேடுதல், நீண்ட காலத் திட்டமிடல் இல்லாமை மற்றும் வீரர்களின் உடல், மன வலிமையை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டங்கள் இல்லாதிருத்தல் போன்ற குறைபாடுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் அடித்தளம் பலமாக இருப்பதாகவும், பாடசாலை மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து திறமையான வீரர்கள் உருவாகி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். “இப்போது தேவையானது முறையான தொலைநோக்குப் பார்வை, நிர்வாகத்தில் தொழில்முறை மற்றும் தலைமைத்துவத்தில் ஒரு நிலையான தன்மை ஆகும். தற்காலிக ஒட்டுவேலைகள் உதவாது” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீரர்கள் தேசிய சீருடையின் மதிப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்றும், பிள்ளைகள் கொண்டாடும் வகையில் மீண்டும் ஒரு புதிய ‘மாவீரர்’ தலைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைத்து அதன் தரத்தை உயர்த்துவதற்கு தைரியமான முடிவுகள் தேவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.