அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்து வெவ்வேறு விமான நிலையங்களில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை பயணத் தாமதங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாமதங்களுக்கு மூன்றாவது வாரமாகத் தொடரும் அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கமே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க முடக்கம் தொடர்வதால் சுமார் 13,000 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் கிட்டத்தட்ட 50,000 போக்குவரத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பளமின்றி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அந்த அதிகாரிகளுக்கு முழுச் சம்பளம் கிடைக்காது எனவும் குறிப்பிடப்படுகின்றது. வார இறுதியில் இன்னும் அதிகமானோர் வேலைக்கு வராமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்குக் குடியரசுக் கட்சியும் மற்றும் ஜனநாயகக் கட்சியும் ஒன்றையொன்று விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், தொழிற்சங்கங்களும் விமான நிறுவனங்களும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணும்படிக் கோரிக்கை விடுத்துள்ளன.