தொடர்ந்தும் எங்களுடைய மக்கள் போராடுவார்கள். நாங்கள் இந்த சிங்கள – பௌத்த ஆட்சியாளர்களை நம்ப மாட்டோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “சட்ட விரோதமாக தனியார் காணிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்றும் மாறும் இப்பிரதேச மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் ஒவ்வொரு பௌர்ணமி தினமும் போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த புதிய ஆட்சி, தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒரு வருடம் நிறைவு பெற்றதன் பின்னரும் ஆராய்கிறோம் ஆராய்கிறோம் என கூறி கடந்த சிங்கள – பௌத்த ஆட்சியாளர்களை போலவே நாங்களும் இருக்கின்றோம் என எமக்கு தெளிவாக புரியவைக்கின்றனர்.
ஆனாலும், இப்பொழுது விகாரையை அகற்ற முடியாது என கூறும் நிலமை காணப்படுகிறது. இதனை பற்றி தீர்மானிக்கவே இவ்வளவு காலம் எடுப்பது என்றால் ஆக்கிரமிப்பை தொடர்ந்து நடத்தும் போது பொதுமக்கள் கலைப்படைபவர்கள் இல்லை. இதனை கை விடுவார்கள் எனும் எண்ணத்தில் தான் இழுத்தடிக்கிறார்கள் என தெரியவில்லை.
இருப்பினும், எமது பொது மக்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த சிங்கள – பௌத்த ஆட்சியாளர்களின் சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை. மக்களை திரட்டி அதற்கான எதிர்ப்புகளை தெரிவிப்போம்.
அது ஒன்று தான் தமிழ் மக்களின் விடுதலை மற்றும் சுதந்திரத்தை பெறுவதற்கான வழியாக இருக்கும் என நம்பித்தான் இந்த போராட்டத்தில் நாம் தொடர்ந்து பங்கு பற்றி கொண்டு இருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.